மின்வெட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது எரிசக்தி அமைச்சு

86
0
Spread the love

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் நிலக்கரி விநியோகம் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் காரணமாக, எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் மின்வெட்டு ஏற்படக்கூடும் எனப் பரவி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்காக முன்பதிவு செய்யப்பட்ட 36 நிலக்கரி கப்பல்களில் 22 கப்பல்கள் ஏற்கனவே தரையிறக்கப்பட்டுள்ளதாக இது தொடர்பாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், மீதமுள்ள நிலக்கரி விநியோகத்தை எவ்விதத் தடங்கலுமின்றி வழங்க முடியும் என விநியோகஸ்தர் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் தற்போது வழமை போன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவசரத் தேவை ஏற்படின், நிலக்கரியைப் பெற்றுக்கொள்வதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், ஏப்ரல் இறுதி வரை மின் உற்பத்தியை முன்னெடுக்கத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது.

எனவே, மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என்றும், பொதுமக்கள் இவ்வாறான தவறான மற்றும் திசைதிருப்பும் பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் எரிசக்தி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here