இலங்கைக்கான 02 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் நாட்டிலிருந்து புறப்பட்டார்.
தனது விஜயத்தின் ஒரு பகுதியாக, நுவரெலியா மற்றும் இராகலைதோட்டப் பகுதியில் இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீட்டு திட்டங்களை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்புடன் இந்திய துணை ஜனாதிபதி பார்வையிட்டார்.
அத்துடன் இன்றைய தினம் சீதா எலிய பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சீதை அம்மன் ஆலயத்திற்குச் சென்று வழிபாடுகளிலும் ஈடுபட்டிருந்தார்.
இராமாயண வரலாற்றுடன் தொடர்புடைய புனிதமான இந்தத் தலம், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான ஆழமான கலாசார மற்றும் நாகரிகத் தொடர்புகளின் அடையாளமாகத் திகழ்வதாக அவர் கூறினார்.
டெல்லியிலிருந்து நேற்றை தினம் நாட்டிற்கு வருகை தந்திருந்த அவர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.







