ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை விரைவில் நிறைவு செய்வோம்

35
0
Spread the love

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை இன்னும் குறுகிய காலத்திற்குள் வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.

இன்று (21.04) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், இந்த விசாரணைகள் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் எட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன், இந்த விசாரணைகளைச் சரியான முறையில் முன்னெடுப்பதற்காக பொலிஸாரும் குற்றப்புலனாய்வுத் திணைக்களமும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

விசாரணைகள் தொடர்பான விபரங்கள் நீதிமன்றத்திற்கு அறிக்கையிடப்பட்டுள்ளதாகவும், மிகக் குறுகிய காலத்தில் இவற்றை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வர முடியும் எனத் தான் நம்புவதாகவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மாத்திரமன்றி, நாட்டில் இடம்பெற்ற அனைத்து சட்டவிரோதச் செயற்பாடுகள், ஊழல், மோசடி மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன், மக்கள் நம்பிக்கையைப் பாதுகாக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் என அவர் வலியுறுத்தினார்.

இதேவேளை, இம்முறை மே தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் நடத்தப்படவுள்ள அனைத்து மே தினப் பேரணிகளுக்கும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாகத் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here