கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல் வெளியேற்றப்பட்டமை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவும், அதற்கான பரிந்துரைகளை முன்வைக்கவும் நியமிக்கப்பட்ட பாராளுமன்றக் குழுவின் முன்னிலையில் சாட்சிகளை அழைப்பதற்கான யோசனை ஒன்றை எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்துள்ளனர்.
அதன்படி, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, குறித்த சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் துறைமுகங்கள் அமைச்சராகப் பணியாற்றிய பிமல் ரத்நாயக்க ஆகியோரை சாட்சியமளிக்க அழைக்குமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.
மேலதிகமாக, அக்காலப்பகுதியில் துறைமுகங்கள் பிரதி அமைச்சராகப் பணியாற்றிய ஜனித ருவன் கொடிதுவக்கு மற்றும் அப்போதைய நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோரையும் குழுவின் முன்னிலையில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி உறுப்பினர்களான அஜித் பி. பெரேரா, தயாசிறி ஜயசேகர, முஜிபுர் ரஹ்மான் மற்றும் டி.வி. சானக்க ஆகியோரின் கையொப்பத்துடன் கூடிய இந்த கடிதம், குழுவின் தலைவரான நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் இன்று பிற்பகல் கூடவுள்ள இக்குழுவின் கூட்டத்தின் போது, குறித்த சாட்சியாளர்களை அழைப்பது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.







