காலி – ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்வத்த பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (03.05) அதிகாலை மின்னல் தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக, வீட்டின் மீது மின்னல் தாக்கியதில் அங்கிருந்த இரண்டு பெண்கள் காயமடைந்து மீபே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், சிகிச்சை பலனின்றி ஒரு பெண் உயிரிழந்துள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கொக்வத்த, ஹபராதுவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய யுவதி என தெரியவந்துள்ளது.
மின்னல் தாக்குதலுக்குள்ளான இருவரும் அப்பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிபவர்கள் எனவும்,
தங்கியிருந்த விடுதி மீது மின்னல் தாக்கியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாகவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காயமடைந்த பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக காலி, கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






