மேல், சபரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பதுளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
சபரகமுவ மாகாணத்திலும் கொழும்பு, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 மில்லிமீற்றருக்கும் அதிக ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் மாகாணத்திலும் களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும். அத்துடன் மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களிலும் அதிகாலை வேளையில் மூடுபனி நிலவும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.






