சாய்ந்தமருது வெடிப்பில் சாரா ஜஸ்மின் உயிரிழக்கவில்லையென நீதிமன்றத்தில் சாட்சி

26
0
Spread the love

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற வெடிப்பில் உயிரிழந்தவர்களின் உடல்களில் சாரா ஜஸ்மின் என்பவரின் உடல் அடையாளம் காணப்படவில்லை என மேல் மாகாண தெற்கு பிரதி பொலிஸ்மா அதிபர் சாமந்த விஜேசேகர கொழும்பு நிரந்தர மூவர் அடங்கிய மேல் நீதிமன்றத்தில் நேற்று (04) சாட்சியமளித்தார்.
9ஆவது பிரதிவாதியான சாஜித் ரம்ஸீன் முன்வைத்த குறுக்கு விசாரணைக்குப் பதிலளிக்கும் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக நவ்ஃபர் மௌலவி உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் வழக்கின் சாட்சிய விசாரணையின் போது, அக்காலத்தில் அம்பாறை பிரிவின் மூத்த பொலிஸ் அத்தியட்சகராகப் பணியாற்றிய சாமந்த விஜேசேகர, அரச புலனாய்வுச் சேவையிடமிருந்து கல்முனை மற்றும் சம்மாந்துறை பகுதிகளில் உள்ள இரண்டு சந்தேகத்துக்குரிய இடங்கள் குறித்து தகவல் கிடைத்ததாக தெரிவித்தார்.
அந்தத் தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் உடனடியாக சம்பவ இடங்களுக்கு அனுப்பப்பட்டதாகவும், 2019 ஏப்ரல் 26ஆம் திகதி சம்மாந்துறையில் உள்ள வீட்டொன்றில் ISIS அமைப்பின் பெயர் பொறிக்கப்பட்ட கருப்பு நிற பதாகை மீட்கப்பட்டதாகவும் அவர் கூறினார். பின்னர் நிந்தவூரிலுள்ள மற்றொரு வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், முதுகுப்பைகள், தாக்குதலாளர்கள் பயன்படுத்திய ஆடைகள் மற்றும் பதிவு செய்யப்படாத ஒரு வேன் என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டதாக சாட்சியில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சாய்ந்தமருது பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து தாம் இராணுவத்தினருடன் அங்கு சென்றதாக அவர் கூறினார். வழியிலேயே பல துப்பாக்கிச் சூடுகளின் சத்தமும், பாரிய வெடிப்புச் சத்தமும் கேட்டதாகவும், மோதல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததாகவும் சாட்சியமளித்தார்.
சம்பவ இடத்துக்குச் சென்றபோது வீடு முழுமையாக வெடித்துச் சிதறியிருந்ததாகவும், வீட்டு முன்பாக T-56 துப்பாக்கியுடன் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடந்ததாகவும் அவர் தெரிவித்தார். அவர் “நிசாப்” என அடையாளம் காணப்பட்டதாகவும், வீட்டு வாசலில் ஸஹ்ரானின் சகோதரர் “செய்னி” உயிரிழந்த நிலையில் இருந்ததாகவும் கூறினார். மேலும், ஸஹ்ரானின் தாய், மகன் மற்றும் சகோதரியின் உடல்களும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டதாக சாட்சியில் குறிப்பிடப்பட்டது.
ஸஹ்ரானின் தாயின் உடல் இருந்த இடத்திற்கு மேலே இருந்த கான்கிரீட் தளத்தில் T-56 துப்பாக்கி, 27 டெட்டனேட்டர்கள் மற்றும் 56 ஜெலிக்னைட் குச்சிகள் மீட்கப்பட்டதாகவும், வீட்டின் கூரையில் ஒரு காலை இழந்த நிலையில் கிடந்த உடல் ஸஹ்ரானின் மற்றொரு சகோதரரான “ரில்வான்” என்பவருடையது என அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
சம்பவத்திற்கு முன்னர் சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்டிருந்த ஒரு பதிவில், “இன்று எங்களைச் சுற்றி வளைத்துள்ளனர்; அவர்களுக்கு நல்ல பாடம் புகட்டுவோம்” என்ற கருத்து இடம்பெற்றிருந்ததாகவும் அவர் நீதிமன்றத்தில் கூறினார்.
மேலும், சினமன் கிராண்ட் ஹோட்டல் தாக்குதலை மேற்கொண்ட மொஹமட் இன்சாப் அஹமத் வெளிநாட்டுக்குச் சென்றதாகவும், தானும் அவருடன் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்று அவர் வெளிநாடு புறப்பட்டதாகவும் சாரா ஜஸ்மின் தெரிவித்திருந்ததால், அதனை உறுதிப்படுத்த விமான நிலைய CCTV காட்சிகள் பரிசோதிக்கப்பட்டதாக சாமந்த விஜேசேகர தெரிவித்தார். ஆனால், அந்தக் காட்சிகளில் அவர்கள் இருவரும் ஒன்றாக விமான நிலையத்துக்குள் சென்றிருந்தாலும், பின்னர் தனித்தனி வாகனங்களில் அங்கிருந்து வெளியேறியிருப்பது தெரியவந்ததாகவும், இதன் மூலம் விசாரணையைத் தவறாக வழிநடத்த முயற்சி செய்யப்பட்டிருந்தது வெளிப்பட்டதாகவும் அவர் சாட்சியமளித்தார்.
இதற்கிடையில், ஷாங்க்ரி-லா மற்றும் சினமன் கிராண்ட் ஹோட்டல் தாக்குதல்களை மேற்கொண்ட மொஹமட் இல்ஹாம் மற்றும் மொஹமட் இன்சாப் ஆகியோரின் உடற்கூறு பரிசோதனைகளை மேற்கொண்ட நீதிமன்ற மருத்துவ நிபுணர் டாக்டர் எஸ்.டி. சன்ன பெரேராவும் சாட்சியமளித்தார்.
அதில், சினமன் கிராண்ட் தாக்குதலாளியின் உடலில் ஒரு கால் மட்டுமே எஞ்சியிருந்ததாகவும், மற்றொரு தாக்குதலாளியின் தலை உடலிலிருந்து பிரிந்திருந்ததாகவும் தெரிவித்தார். மேலும், அவரது உடல் பல சிறிய துண்டுகளாக சிதறியிருந்ததுடன், தாடை எலும்பு நடுவில் பிளந்திருந்தமை தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் தன்மைக்கு ஏற்ப நிகழக்கூடிய காயமாகும் என்றும் அவர் நீதிமன்றத்தில் விளக்கமளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here