மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்டச் செயலாளருக்கிடையிலான சந்திப்பு ஒன்று இன்று (11.05)திங்கட்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
குறித்த சந்திப்பின் போது இடம்பெற்ற கலந்துரையாடலில்.
மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பில் மாவட்ட செயலாளரிடம் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக, காரியாலய வாடகை, பதில் கடமைக்கான கொடுப்பனவுகள், காகிதாதிகள் வழங்குதல், திடீர்
இடமாற்றங்கள்,மற்றும் மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி பணிப்பாளருக்கும் உத்தியோகத்தர்களுக்கும் இடையே உள்ள பிணக்குகள் தொடர்பில் மாவட்ட செயலாளருக்கு தெரிவிக்கப்பட்டது.
அத்தோடு எதிர்காலத்தில் சமுர்த்தி வங்கிகளில் குறைந்த வட்டியுடனான கடன்களை மக்களுக்கு வழங்குதல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இதன்போது, குறித்த விடயங்கள் உள்ளடங்கிய கடிதம் ஒன்றும் மாவட்டச் செயலாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் துரித கவனம் எடுப்பதாக மன்னார் மாவட்டச் செயலாளர் க. கனகேஸ்வரன் தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலில். சமுர்த்தி தொழிற் சங்கத்தின் தேசிய பிரதித் தலைவர் ஐ.எச். அப்துல் வஹாப், மன்னார் மாவட்ட சமுர்த்தி தொழிற் சங்கத் தலைவர்ஏ.சி. அஸ்லீம் , மற்றும் மன்னார், முசலி, நானாட்டான், மாந்தை மேற்கு ஆகிய பகுதிகளிலிருந்து சமுர்த்தி தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்..







