பொதுப் போக்குவரத்து சேவையின் போது முரண்பாடு, தாக்குதல், நேர ஒழுங்கைக் குழப்புதல் மற்றும் உரிய பதிவுகளின்றிச் சேவையில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் இரு தனியார் பேருந்து சாரதிகளுக்கு பணித்தடை மற்றும் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், பொறியியலாளர் சூசைப்பிள்ளை விமலேஸ்வரன் இன்றைய தினம் (11.05)ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பரந்தன் – முறிகண்டி போக்குவரத்து பாதையில் சேவையாற்றிய சாரதி ஒருவர் மற்றொரு சாரதியைத் தாக்கியதுடன், புளியம்பொக்கணை கோவில் உற்சவத்தின் போது பேருந்து நேர ஒழுங்கைக் குழப்பியமை போன்ற விடயங்கள் நிரூபிக்கப்பட்டதால் குறித்த சாரதிக்கு 5 நாட்கள் பணித்தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் இராமநாதபுரம் – முழங்காவில் போக்குவரத்து பாதையில் சேவையாற்றி வரும் சாரதி ஒருவர் கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் வைத்து மற்றொரு சாரதியை அச்சுறுத்தியதுடன், அதிகார சபையில் பதிவு இன்றிச் சேவையில் ஈடுபட்டிருந்ததும் கண்டறியப்பட்டுள்ளதனால் அவருக்கு 1,500 ரூபாய் தண்டப்பணமும் 3 நாட்கள் பணித்தடையும் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் ,பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் அல்லது வன்முறையில் ஈடுபடும் பணியாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் தொடரும் எனவும் தெரிவித்த அவர்
இவ்வாறான முறைகேடுகள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் ஆதாரங்களுடன் கீழ்காணும் 071 9090900 வட்ஸ்அப் இலக்கத்தினூடாக அறிவிக்குமாறும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.







