நடப்பு ஆண்டில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர் தரப் பரீட்சைகளுக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைக்குத் தோற்றவுள்ள அனைத்து மாணவர்களுக்கும் இந்த வருட இறுதிக்குள் நிரந்தர தேசிய அடையாள அட்டைகளை வழங்கி முடிப்பதற்குத் திணைக்களம் எதிர்பார்ப்பதாக அதன் பணிப்பாளர் நாயகம் ஜகத் ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் அடையாள அட்டை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சு ஊடாக ஏற்கனவே பாடசாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, அதிபர்கள் எந்த வித தாமதமும் இன்றி இந்த விண்ணப்பங்களை திணைக்களத்திற்கு அனுப்பி வைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
எதிர் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, இதுவரை அடையாள அட்டை கிடைக்கப் பெறாத விண்ணப்பதாரர்கள், ஆட்பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்கள் அல்லது மின்னஞ்சல் முகவரிகள் ஊடாக திணைக்களத்தைத் தொடர்புகொண்டு தங்களது அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
தேசிய பரீட்சைகள் தொடங்குவதற்கு முன்னர் அனைத்து மாணவர்களும் செல்லுபடியாகும் அடையாள அட்டைகளை வைத்திருப்பதை உறுதி செய்வதே இந்த விசேட திட்டத்தின் நோக்கம் என ஆட்பதிவுத் திணைக்களம் மேலும் வலியுறுத்தியுள்ளது.







