இந்த ஆண்டு நிறைவடைவதற்குள் அனைத்து கடற்றொழில் அதிகாரிகளுக்கும் மின்சார மோட்டார் சைக்கிள் ஒன்றை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (19) நடைபெற்ற நிகழ்வில் 15 மாவட்ட கடற்றொழில் அலுவலகங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 112 கடற்றொழில் உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், அரசியல் சிபாரிசுகள் அல்லது கட்சிப் பாகுபாடுகளின்றி முறையான நடைமுறைகளின் அடிப்படையிலேயே நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். புதிய உத்தியோகத்தர்களுக்கு எதிர்காலத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுகள் கிடைக்கும் எனவும் குறிப்பிட்டார்.
அத்துடன், உத்தியோகத்தர்கள் தங்களிடமுள்ள டிஜிட்டல் மற்றும் நவீன தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி, கடற்றொழிலாளர்களுக்கும் அந்த அறிவை வழங்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
மக்களுக்கான சேவையை சிறப்பாக வழங்குவதுடன், மக்கள் பணத்தை வீணடிக்கும் சலுகைகள் மற்றும் சுகபோகங்களை தாம் நிராகரித்துள்ளதாகவும், அமைச்சர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்கள் மற்றும் மேலதிக பாதுகாப்பு வசதிகளையும் பெற்றுக்கொள்ளவில்லை எனவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் தெரிவித்தார்.







