அரசாங்கத்தின் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் விசேட மீளாய்வுக் கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது, Number Portability திட்டம், அரசாங்கத்தின் டிஜிட்டல் கொள்முதல் மற்றும் சேவைத் தளம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களின் செயல்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டது.
அத்துடன், அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்கி பொதுமக்களுக்கான சேவை வழங்கலை மேலும் திறம்பட முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள PIC-Net (Public Impact Champions Network) திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், Data Transmission Unit (DTU) எனப்படும் தரவு பரிமாற்றப் பிரிவின் செயற்பாடுகள், AI தரவு மையம், அரச மற்றும் பொதுச் சேவைத் துறைகளுக்கான டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட விடயங்களும் ஆராயப்பட்டன.
டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்களை ஊக்குவிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் GovTech Academyயின் பயிற்சி மற்றும் கல்வித் திட்டங்களின் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டது.
இதனுடன், GovTech நிறுவனத்தை நிறுவுதல், தொழில்நுட்ப உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்தல் மற்றும் தேவையான ஊழியர்களை பணியமர்த்துதல் ஆகிய பணிகளின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இந்தச் சந்திப்பில் டிஜிட்டல் பொருளாதாரப் பிரதி அமைச்சர் எரங்க வீரவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீதனபால உள்ளிட்ட அமைச்சு மற்றும் அதன் கீழ் இயங்கும் நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.







