தொடர்பில் ஆலோசனைகளை வழங்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தனது குடும்பத்தினரின் தவறான பொருளாதாரத் தீர்மானங்களாலேயே நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டது என்பதை பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாடு பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர் என தற்போது நாமல் ராஜபக்ச முதலைக் கண்ணீர் வடித்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
எனினும், நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கான அடிப்படைக் காரணம் குறித்து அவர் எங்கும் குறிப்பிடுவதில்லை எனவும் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
2022ஆம் ஆண்டு ராஜபக்ச குடும்பத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தவறான பொருளாதாரத் தீர்மானங்களின் காரணமாகவே நாடு வங்குரோத்து நிலையை எதிர்கொண்டதாக உயர் நீதிமன்றம் ஏகமனதாக தீர்ப்பளித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காகவே சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு பெற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்த அமைச்சர், பொருளாதார மீட்சி குறித்து ஆலோசனைகளை வழங்கும் நாமல் ராஜபக்ச, தனது குடும்பமே நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என்பதை முதலில் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், ‘அரசாங்கத்தை வீழ்த்துவோம், மக்களை ஒன்றிணைப்போம்’ எனக் கூறி ஜீ.எல். பீரிஸின் வீட்டில் இரவு நேரங்களில் கூட்டங்களை நடத்துவதை விடுத்து, நாமல் ராஜபக்ச மக்களை நேரடியாக சந்திக்க வேண்டும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.







