நபர் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக பொலிஸாரால் உறவினர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கான இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் முழுவீச்சில் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது, இறந்ததாக அறிவிக்கப்பட்ட அதே நபர் உயிருடன் தனது வீட்டுக்கு வந்து அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்த சம்பவம் கல்கமுவ, கொஹொபன்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கல்கமுவ, கொஹொபன்குளம் பகுதியைச் சேர்ந்த டி. எம். கீர்த்திசேன என்பவரே இவ்வாறு உயிருடன் வீடு திரும்பியுள்ளார்.
வாரியப்பொல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கீர்த்திசேன சிறைச்சாலை வளாகத்துக்குள் உயிரிழந்துவிட்டதாக நான்னேரிய பொலிஸார் அவரது உறவினர்களுக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து அதிர்ச்சியடைந்த உறவினர்களும் கிராம மக்களும் ஒன்றிணைந்து இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர். கிராமம் முழுவதும் துயரப் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், இறுதிச்சடங்கு வீட்டுக்கான பந்தல் அமைத்தல் உள்ளிட்ட ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன. மேலும், தகனக் கிரியைகளுக்கான தயார்படுத்தல்களும் இடம்பெற்றுக்கொண்டிருந்தன.
இவ்வாறான சூழ்நிலையில், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் கீர்த்திசேன திடீரென உயிருடன் தனது வீட்டுக்கு வந்து சேர்ந்துள்ளார்.
தனது இறுதிச்சடங்கிற்காகவே தயார்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த வீட்டுக்கு அவர் உயிருடன் வந்து நின்ற சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.







