சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை இளைஞர் அனோஜன் சிவராசாவின் விவகாரத்துக்கு தீர்வு காண, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை நாடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ள மனோ கணேசன், சவூதி இளவரசர் முகமது பின் சல்மானுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையின் உயரிய சிவில் விருதான ‘ஸ்ரீலங்கா ரத்னா’ விருதைப் பெற்றுள்ளதுடன், இலங்கையின் நீண்டகால நண்பராகவும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
“உங்கள் நண்பரும், ஸ்ரீலங்கா ரத்னா விருது பெற்றவருமான பிரதமர் நரேந்திர மோடியின் அவசரக் கவனத்திற்கு அனோஜன் சிவராசாவின் இக்கட்டான நிலையை கொண்டு வருமாறு நான் வலியுறுத்துகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மனிதாபிமான அடிப்படையில் இவ்விவகாரத்துக்கு தீர்வு காணும் வகையில், சவூதி இளவரசர் முகமது பின் சல்மானிடம் இந்தியப் பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் தலையிட்டு பேசுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.







