அடுத்த ஆறு மாதங்களுக்குள் டிஜிட்டல் கற்றல் முறைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை

61
0
Spread the love

 

கற்றல் இடைவெளியைக் குறைக்க டிஜிட்டல் கற்றல் முறைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.

டிஜிட்டல் கல்வி மாற்றத்தை மேற்பார்வையிட அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பணிக்குழுவுடன் நேற்று முன்தினம் (20.06.2025) நடைபெற்ற கலந்துரையாடலின் போது உயர்கல்வி, கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரான பிரதமர் இந்தக் கருத்துக்களைத்
தெரிவித்தார்.

கல்வித் துறையில் டிஜிட்டல் மாற்றத்தை ஆரம்பித்தல், தொடர்புடைய சவால்களை எதிர்கொள்ளல் மற்றும் தேவையான கொள்கைகளை செயற்படுத்துவது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் தற்போதுள்ள 42,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பற்றாக்குறையை விரைவில் நிவர்த்தி செய்ய வேண்டும் என பிரதமர் இங்கு வலியுறுத்தினார்.

ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக,தற்போதுள்ள வளங்களை திறம்பட பயன்படுத்துவதன் மூலம் கற்றல் இடைவெளியைக்
குறைக்க அடுத்த ஆறு மாதங்களுக்குள் டிஜிட்டல் கற்றல் முறைகளை அறிமுகப்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்
என்றும் பிரதமர் கூறினார்.

இந்த பணிக்குழுவின் முதன்மை நோக்கங்களின் கீழ், மாற்றுத்திறனாளிகள் சமூகம் உட்பட அனைத்து பாடசாலைகளுக்கும் வசதிகளை
சமமாக விநியோகிப்பதை உறுதி செய்வது அடங்கும். இந்த இலக்கை அடைவதற்கு ஒரு வலுவான, பல்துறை பணிக்குழு அவசியம் என
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் போது பணிக்குழுவின் அதிகாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன, மேலும் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி இந்த பணிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் தொழிற்கல்வி துணை அமைச்சர் நளின் ஹேவகே, கல்வி மற்றும் உயர்கல்வி துணை அமைச்சர் மதுர செனவிரத்ன,
பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, கல்வி அமைச்சின் செயலாளர் நலக்க கலுவாவா, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண தனபால, பணிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here