யுத்தத்திற்கு பின்னர் வனவளத் திணைக்களமும் வனஜீவராசிகள் திணைக்களமும் GPS ஐ பயன்படுத்தியே வனப்பகுதிகளை அடையாளப்படுத்தியுள்ளதாக
சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி தெரிவித்தார்.
பாலியாறு நீர்த்திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று (13.07) மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.
இதன்போது வடக்கு, கிழக்கில் மக்களின் காணிகள் கையகப்படுத்தப்பட்டு வைத்திருக்கின்றமை தொடர்பில் அரசாங்கத்தின்
தீர்மானம் என்னவென ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
வனவளத் திணைக்களமும் வனஜீவராசிகள் திணைக்களமும் யுத்தத்திற்கு பின்னர் GPS ஐ பயன்படுத்தியே வனப்பகுதிகளை அடையாளப்படுத்தியுள்ளன.
ஆனால் அந்தப்பகுதிகளுக்கு சென்று அதனை கண்காணித்து அடையாளப்படுத்தவில்லை. GPS தொழினுட்பத்தினூடாக அதனை செய்துள்ளனர்.
வடக்கு, கிழக்கில் காணி பிரச்சினைகள் காணப்படுகின்றன. காணி அமைச்சும் சுற்றாடல் அமைச்சும் இணைந்து காணி பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் வகையில்
அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்கவுள்ளோம்.
வடக்கு, கிழக்கில் உள்ள காணி பிரச்சினை தொடர்பில் மீள ஆராய்வதற்கு குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை அந்த பத்திரத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது” என்றார்.
குறித்த கூட்டத்தில் அமைச்சர் அனுர கருணாதிலக்க, நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் எம்.எம்.நயீம், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்லத்தம்பி திலகநாதன், நீர்வளங்கள் மற்றும் வடிகால் அமைச்சின் தலைவர், மன்னார் மாவட்டத்தின் வீதி அபிவிருத்தி அதிகார சபை, மன்னார் மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள், அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள், பொறியியலாளர்கள், மன்னார் மாவட்டத்தின் நகர சபை மற்றும் பிரதேச சபை தவிசாளர்கள், தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்கள், பொதுமக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.








