மன்னார் அந்தோனிபுரம் மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகில், அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட 5,000 கடல் அட்டைகளுடன் டிங்கி படகு ஒன்றையும், அதில் பயணித்த இரு நபர்களையும் இலங்கை கடற்படையினர் முன்தினம் (04.08) கைது செய்துள்ளனர்.
இலங்கை கடற்படைக் கப்பல் கஜபா முகாமின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இலங்கை கடற்படைக் கப்பல் புவனேக்க முகாமின் புலனாய்வுப் பிரிவினரும், அந்தோனிபுரம் கடற்படை காவலரணில் பணியாற்றிய கடற்படையினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
இதன்போது, OFRP-A-5279 PTM என்ற பதிவு இலக்கமுடைய டிங்கி படகில், 50 ரிகிட் ஃபோம் (Rigid Foam) பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5,000 கடல் அட்டைகள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும், கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகள், டிங்கி படகு உள்ளிட்ட பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







