முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2022 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் திகதி போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த, பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பிரகடனப்படுத்திய அவசரகால சட்ட விதிமுறைகளினால் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 02 இன் கீழ் அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிறப்பித்த அவசரகாலச் சட்டம் தன்னிச்சையான மற்றும் அதிகாரமற்ற செயற்பாடு என மூவரடங்கிய நீதிபதிகள் கொண்ட அமர்வில் பெரும்பான்மையான நீதியரசர்கள் தீர்மானித்துள்ளனர்.
தலைமை நீதிபதி முர்து பெர்னாண்டோ மற்றும் யசந்த கோதாகொட ஆகிய நீதிபதிகளில்; ரணில் விக்ரமசிங்க அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக தீர்ப்பளித்த போதிலும் நீதிபதி அர்ஜுன ஒபேசேகர அப்போதைய பதில் ஜனாதிபதியின் அவசரகாலப் பிரகடனம் அடிப்படை மனித உரிமைகளை மீறவில்லை என்று கூறினார்.
மாற்றுகொள்கைகளுக்கான அமைப்பு , இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் நாயகம் அம்பிகா சத்குணநாதன் மற்றும் லிபரல் இளைஞர் இயக்கம் ஆகியவை இந்த அடிப்படை உரிமைகள் மனுக்களை தாக்கல் செய்திருந்தன.
மேலும் மனுதாரர்களின் சட்டக் கட்டணங்களை அரசாங்கம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.







