வங்காள விரிகுடாவில் பதிவான நில அதிர்வால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லையென புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் தீபானி வீரகோன் தெரிவித்துள்ளார்.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே, வங்காள விரிகுடாவில் இன்று (29.07) அதிகாலை 6.3 ரிக்டர் அளவிலான நிலஅதிர்வு பதிவானது.
இந்த நிலஅதிர்வு கடலுக்கு அடியே 10 கிலோ மீற்றர் ஆழத்தில் புதிவானதாக இந்திய தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்தது.
இந்த நிலஅதிர்வை தொடர்ந்து சிறியளவிலான நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் நிலஅதிர்வால் எதுவித பாதிப்பும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு தென்கிழக்கே சுமார் 260 கிலோ மீற்றர் தொலைவில் இந்த நிலஅதிர்வு ஏற்பட்டதாகவும், இலங்கையில் அதன் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆகப் பதிவாகியதாகவும் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் தீபானி வீரகோன் தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்கள் இது தொடர்பாக அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லையென தீபானி வீரகோன் அறிவுறுத்தினார்.
தற்போது வரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.







