எதிர்காலத்தில் ஆழமான ஒத்துழைப்பு, பரந்த புரிதல் மற்றும் சிறந்த நட்புக்கான அடித்தளமாக இந்த பயணம் அமையும் என நம்பிக்கை
மாலைதீவின் பிரதி சபாநாயகர் மற்றும் அரசாங்கத்தின் ஐந்து அமைச்சரவை அமைச்சர்கள் நேற்று (29.07) ‘குரும்பா மோல்டீவ்ஸ்’ விடுதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்து கலந்துரையாடினர்.
அதன்படி, மாலைதீவு பிரதி சபாநாயகர் அகமத் நஸீம், வெளியுறவு அமைச்சர் கலாநிதி அப்துல்லா கலீல பொருளாதார அபிவிருத்தி மற்றும் வர்த்தக அமைச்சர் மொஹமட் சயீத் , பாதுகாப்பு அமைச்சர் மொஹமட் கசான் மௌமூன் , நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சர் மூசா சமீர் , உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் அலி ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினர்.
மாலைதீவுக்கு அரச விஜயம் மேற்கொண்டதற்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த அவர்கள், இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதன் 60 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் இந்தப் பயணம், எதிர்காலத்தில் ஆழமான ஒத்துழைப்பு, பரந்த புரிதல் மற்றும் சிறந்த நட்புக்கான அடித்தளமாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினரும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.







