நாட்டில் வெவ்வேறு பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்துகளில் இரு பெண்கள் சம்பவ இடங்களிலேயே உயிரிழந்துள்ளனர்.
இதன்படி, கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தொன்றில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவரை பின்னால் வந்த டிப்பர் முந்திச்செல்ல முற்பட்ட வேளையே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து இடம்பெற்ற இடத்தில் விபத்தை ஏற்படுத்திய சாரதி பொதுமக்களால் தாக்கப்பட்டார். இதனால் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.
இதனிடையே, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை, மில்லகஹமுல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 44 வயதான பெண் ஒருவரும் உடல் நசுங்கி சம்ப இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்து நாவலப்பிட்டி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் கைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற பெண் உயிரிழந்துள்ளார்.
மேலும், இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய உயிரிழந்த பெண்ணின் கணவர் படுகாயமடைந்த நிலையில் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.







