போர் நிறைவடைந்து 17 வருடங்கள் கடந்தும் வடக்கு மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படவில்லையென கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
கிளிநொச்சி பளை பிரதேசத்திலுள்ள பிராந்திய தென்னைப் பயிர்ச்செய்கை சபைக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட அமைச்சர், உத்தியோகத்தர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இதனைத் தெரிவித்தார்.
வடக்கில் இருந்து வறுமை ஒழிக்கப்பட வேண்டும் என்றும் அதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் இதன்போ தெரிவித்தார்.
தென்னை பயிர்செய்கை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு, அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர் குறிப்பாக வடக்கில் இந்த வருடத்தில் 16 ஆயிரம் ஏக்கர் காணியில் தென்னை பயிர்செய்கை செய்வதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
தற்போது காணிகள் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் வறுமையை ஒழிக்காமல் நாட்டின் அபிவிருத்தி பற்றி சிந்திக்க முடியாது எனவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் தெரிவித்தார்.
அமைச்சரின் இந்த விஜயத்தின் போது, பெருந்தோட்டத்துறை அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பிரதி அமைச்சர் சுந்திரலிங்கம் பிரதீப், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், , பெருந்தோட்டத்துறை அமைச்சின் செயலாளர், அதிகாரிகள் என பலரும் கலந்துக் கொண்டனர்.







