வவுனியாவில் தனியார் கல்வி நிலையக் கிணற்றிலிருந்து உயர்தர மாணவி ஒருவர் இன்று (11.08) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் உயர்தர வர்த்தகப் பிரிவு மாணவர்களுக்கு காலை தொடக்கம் பகல் 12 மணிவரை வகுப்பு நடைபெற்றுள்ளது.
குறித்த கல்வி நிலையத்தில் உயர்தர வர்த்தகபிரிவு 2025 இல் கல்வி கற்ற குறித்த மாணவி நீண்ட நேரமாகியும் வீடு வந்து சேராமையால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவியைத் தேடியுள்ளனர்.
இந்நிலையில்,. மாணவியின் புத்தகப்பை, துவிச்சக்கர வண்டி என்பன மாணவி கல்வி பயின்ற தனியார் கல்வி நிலையத்தில் காணப்பட்டதுடன், அக்கல்வி நிலைய வளாகத்தில் இருந்த கிணற்றின் அருகே மாணவியின் காலணியும் காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பெற்றோர் மற்றும் கல்வி நிலைய நிர்வாகத்தினர் வவுனியா பொலிசாருக்குத் தகவல் வழங்கியதையடுத்து , சம்பவ இடத்திற்குப் பொலிசார் வருகை தந்தனர் .
இந்நிலையில், மாநகர சபையினர், கிராம அலுவலர், கிராம மக்கள், மாணவர்கள் எனப் பலரும் இணைந்து 40 அடி ஆழமான கிணற்றில் மேற்கொண்ட தேடுதலில் மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தகப் பிரிவில் கல்வி பயிலும் வவுனியா, கோமரசன்குளம் பகுதியைச் சேர்ந்த மாணவியே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
மாணவியின் சடலம் வவுனியா வைத்தியாசலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தொடர்பில் வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்







