மன்னார் மாவட்டத்தில் இடம் பெற்றுவரும் காற்றாலை மற்றும் கனியமணல் அகழ்வு திட்டங்களை உடனடியாக நிறுத்த கோரி மன்னார் மாவட்ட மக்கள்,பொது அமைப்புக்கள்,சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து ஆரம்பித்துள்ள தார்மீக போராட்டம் 10 வது நாளாக இடம் பெற்று வருகின்றது
மன்னார் தாழ்வுபாடு கிராம மக்கள் இன்றைய தினம் சுழற்சி முறையில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை போராட்ட குழுவுக்கு தெரிவித்து வருகின்றனர்
நேற்றைய தினம் நள்ளிரவு குறித்த காற்றாலை செயற்திட்டங்களுக்கான பாரிய உபகரணங்கள் மன்னார் தீவுக்குள் பொலிஸார் பாதுகாப்புடன் எடுத்துவர முற்பட்ட நிலையில் போராட்டகாரர்களின் பலத்த எதிர்பின் காரணமாக காற்றாலை உபகரணங்களுடன் வருகைதந்த வாகனத்தினால் உள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டது
பொலிஸார் குறித்த போராட்டக்காரர்களை வெளியேற்ற முயன்றபோதும் அவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுத்த நிலையில், நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக குறித்த வாகனம் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் போராட்டகாரர்களுக்கு எதிராக இன்றைய தினம் மன்னார் பொலிஸார் தடை உத்தரவு ஒன்றை பெறுவதற்காக மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதுடன் குறித்த வழக்கில் போராட்டக்காரர்கள் சார்பாக சட்டத்தரணி சுமந்திரன் அவர்கள் ஆஜராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.











