பயன்பாட்டில் இருக்கும் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள்

79
0
Spread the love

முன்னாள் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள், முப்படைகளின் ஆயுதங்கள் மற்றும் கொள்ளையிடப்பட்ட துப்பாக்கிகள் என்பன தற்போது நாட்டில் கணிசமான எண்ணிக்கையில் புழக்கத்தில் உள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் இன்று (14.08) பொலிஸ் மா அதிபராக பதவியேற்றுக் கொண்ட அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.

இலங்கையின் 37ஆவது பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று அவரின் கடமையேற்பு நிகழ்வுகள் பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்றிருந்தன.

இதன்போது உரையாற்றிய அவர்,

“குற்றம் மற்றும் போதைப்பொருள் வலையமைப்புகளைத் தடுப்பதற்கான சிறப்பு நடவடிக்கைகள் தற்போதுள்ள சட்டங்களின் கீழ் திறம்பட தொடர முடியாது என்று ஜனாதிபதி, நீதி அமைச்சர் மற்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும், இந்த இடைவெளிகளை நிவர்த்தி செய்ய புதிய சட்ட வரைவு உருவாக்கப்பட்டு வருகின்றது. குற்றவியல் மற்றும் ஊழல் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடும் நபர்களைக் கையாள்வதற்கான சட்டங்களை நாங்கள் உருவாக்கி வருகிறோம்.

சர்வதேச சமூகம் அதன் முழு ஆதரவையும் வழங்கியுள்ளது. மேலும் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் அவர்களின் உதவியைப் பயன்படுத்தவும் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தற்போதைய சட்ட அமைப்பில் உள்ள குறைபாடுகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு குற்றங்களை எதிர்த்துப் போராடும் முயற்சிகளை வலுப்படுத்த திருத்தப்பட்டு வருகின்றன.

அண்மைய, துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் உட்பட பல குற்றங்கள், வெளிநாட்டிலிருந்து செயல்படும் தனிநபர்களால் உள்ளூர் கூட்டாளிகள் மூலம் திட்டமிடப்படுகின்றன.

இந்த குற்றவியல் வலைப்பின்னல்களில் ஈடுபட்டுள்ள சில நபர்களில் ஆயுதப் படைகளில் இருந்து தப்பியோடியவர்கள் மற்றும் பொலிஸ் உறுப்பினர்கள் கூட உள்ளனர்.

இதேவேளை, முப்படைகளின் ஆயுதங்கள், முன்னாள் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள், கொள்ளையிடப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் பொலிஸ் திணைக்களத்துடன் தொடர்புடைய சிலவும் அடங்கும். அவை குறித்து விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

குற்றவியல் அல்லது போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் மீது கடுமையான ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்ட அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்படுவார்கள்”என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here