இராணுவ பிரசன்னம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பருத்தித்துறையில் இன்று (25.08) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பருத்தித்துறை துறைமுகத்தடியில் இருந்து காலை 8:30 அளவில் பேரணியை ஆரம்பித்து, வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் வரை சென்று கவனயீர்ப்பில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பருத்தித்துறை நகரை மீட்போம் எனும் தொனிப்பொருளில் இந்த பேரணி மற்றும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
நீண்ட காலமாக இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பருத்தித்துறை தபால் அலுவலகத்தை விடுவிக்க வேண்டும், பருத்தித்துறை நகரின் வரலாற்று சிறப்புமிக்க வெளிச்ச வீட்டில் இருக்கும் இராணுவத்தினர் வௌியேற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்றை கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவர்களால் பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான தீர்வுகள் உடனடியாக கிடைக்காத பட்சத்தில் பாரியளவான போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக போராளிகள் கட்சியின் வேந்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.







