செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து சிறார்களினது என நம்பப்படும் எலும்புக்கூட்டு தொகுதிகள் உள்ளிட்ட 08 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று (27.08) மேலும் 03 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் தொடர்ச்சியான அகழ்வுப் பணிகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்று மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.
நேற்று (26.08) அகழ்வாய்வு தளங்களை மேலும் விஸ்தரிக்கும் நடவடிக்கைகளின் போது புதிதாக 16 என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை மேலும் 03 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதேவேளை நேற்று அடையாளம் காணப்பட்ட என்புக்கூட்டு தொகுதிகளில் 08 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்று 35 ஆவது நாளாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது.
அதேவேளை கட்டம் கட்டமாக இதுவரையில் 43 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது, இன்று அகழ்ந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூட்டு தொகுதியுடன் 158 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இதுவரையில் 169 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







