ஜனாதிபதி இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம்

160
0
Spread the love

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, யாழ்ப்பாணத்துக்கு இன்று (01.9) விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இதன்போது சில முக்கிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.

அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்று ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு ஆரம்பிக்கப்படவுள்ள செயற்பாடுகளின் முதற்கட்ட நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி, முதலாவதாக மயிலிட்டி துறைமுகத்திற்குச் செல்லவுள்ளார்.

அதன்பின்னர், புதிய கடவுச் சீட்டு அலுவலகத்தை ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.

வடக்கு மாகாணத்திற்கான இரண்டாவது, புதிய கடவுச்சீட்டு அலுவலகத்தை ஜனாதிபதி இன்று திறந்துவைக்கவுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

70 மில்லியன் ரூபாய் செலவில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலக வளாகத்தில் புதிய கடவுச் சீட்டு அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று முதல் வடக்கு மாகாணத்திலுள்ள மக்கள் தமக்கான கடவுச் சீட்டுக்களை யாழ்ப்பாணத்தில் திறக்கப்படும் புதிய அலுவலகத்தினூடாக
பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சர் கூறியுள்ளார்.

ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளுடாக புதிய அலுவலகத்தில் கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்படும் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கும் ஜனாதிபதி செல்லவுள்ளார். அத்துடன், யாழ்ப்பாணம் – மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச விளையாட்டு மைதானத்துக்கான
அடிக்கல் நாட்டு நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இன்று மாலை (01.09) நடைபெறவுள்ளது.

அத்துடன் சில முக்கிய கலந்துரையாடல்களிலும் ஜனாதிபதி ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை நிறைவு செய்து, நாளை முல்லைத்தீவிற்கு ஜனாதிபதி செல்லவுள்ளார்.

இதன்போது வட்டுவாகல் பாலத்திற்கான புனரமைப்பு பணிகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here