செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து முன்னதாக கண்டுபிடிக்கப்பட்ட 07 என்புக்கூட்டுத் தொகுதிகள் இன்று முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டதுடன், மேலும் 9 என்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன.
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம் (01.09) 8 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்ட நிலையில், இந்த என்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், புதிதாகவும் அடையாளம் காணப்பட்டன.
செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்றைய தினம் 40 ஆவது நாளாக அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டன.
அதேவேளை கட்டம் கட்டமாக இதுவரையில் 49 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, இன்றைய தினம் (01.09) அகழ்ந்து எடுக்கப்பட்ட 07 என்புக்கூட்டு தொகுதிகளுடன் இதுவரையில் 198 என்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, இன்று கண்டுபிடிக்கப்பட்ட 09 என்புக்கூட்டுத் தொகுதிகளுடன் இதுவரை 218 என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







