மன்னார் காற்றாலை திட்டம் – ஜனாதிபதியால் வழங்கப்பட்ட காலவகாசம் இன்றுடன் நிறைவு

228
0
Spread the love

மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் கோபுரங்கள் குறித்து துரித நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட ஒரு மாத காலக்கெடு இன்று வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகின்ற நிலையில், ஜனாதிபதியின் சாதக பதிலை தாம் எதிர்பார்த்துள்ளதாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் காற்றாலை,கனிய மண் அகழ்விற்கு எதிரான போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை (12.09) 41 ஆவது நாளாக இடம்பெற்று வருகின்ற நிலையில் விசேட ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மக்களின் இருப்பிடங்களையும்,வாழ்விடங்களையும், பாதுகாக்கும் வகையில் மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மன்னார் மக்கள் மற்றும் இளையோர் இணைந்து முன்னெடுத்து வருகின்ற போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை (12.09) 41 ஆவது நாளைக் கடந்து செல்கின்றது.

மேலும் மன்னாரில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்கு  ஜனாதிபதியால் ஒரு மாத காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.குறித்த காலக்கெடு இன்று(12.09) வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகின்றது.

ஜனாதிபதியின் அலுவலகத்தில் இருந்து எமது போராட்டத்தின் பலனாக நல்ல முடிவு வரும் என எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.

இதுவரை எந்த முடிவுகளும் ஜனாதிபதியிடம் இருந்து எமக்கு கிடைக்கவில்லை.பல தடவைகள் நாங்கள் மன்னார் மாவட்டச் செயலகத்துடன்
தொடர்புகொண்டு கடந்த 30 நாட்களுக்குள் நடந்த செயற் திட்டங்கள் குறித்து கேட்டறிந்ததோடு,எமக்கு எவ்வித தகவல்களும் வழங்கப்படாமை குறித்து தெரிவித்தோம்.

எனினும் தமக்கும் எவ்வித அறிவித்தல்களும் கிடைக்கவில்லை என்ற பதில் எமக்கு கிடைத்தது.நாங்கள் முக்கிய மூன்று கோரிக்கைகளை ஜனாதிபதிக்கு முன் வைத்தோம்.புதிதாக அமைக்கப்பட்டு வரும் 04 காற்றாலைகள்,மேலும் அமைக்கப்படவுள்ள 10 காற்றாலை வேலைத்திட்டங்களும் உடன் நிறுத்தப்பட்டு, குறித்த திட்டம் வேறு இடங்களுக்கு மாற்றப்பட வேண்டும்.

மன்னார் மாவட்டத்தில் இருந்து கணிய மணல் அகழ்வு முன்னெடுக்கப்படக்கூடாது.தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும்,மன்னாரில் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட காற்றாலைத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை  உடன் நிவர்த்தி செய்து பாதிக்கப்பட்ட மக்களை  விடுவிக்க
வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளையும் நாங்கள் போராட்டக் குழு சார்பாக ஜனாதிபதியிடம்  முன் வைத்தோம்.

இதுவரை அரச தரப்பில் இருந்து எங்களுக்குச் சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை.இது நாட்டுக்கான போராட்டம் நாட்டில் வாழ்கின்ற அனைத்து மக்களும் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பதற்கான போராட்டம்..எங்களுடைய கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு உரிய முறையில் உறுதிமொழி தந்தால் இப்போராட்டம் கைவிடப்படும்.

நாட்டின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்கவும் நாங்கள் தயாராக உள்ளோம்.காற்றாலைத் திட்டத்திற்கு நாங்கள் எதிர்ப்பு இல்லை.ஆனால் மன்னார் மாவட்டத்தில் மக்களின் வாழ்வாதாரத்தையும்,வாழிடத்தையும் பாதிக்கின்ற எந்த திட்டமும் எமக்கு வேண்டாம்.

எனவே அரசாங்கம் எமது கோரிக்கைகளை ஏற்று செவிசாய்க்க வேண்டும்.இல்லை என்றால் எமது போராட்டம் வேறு திசைகளில் விரிவடையும்.மன்னார் மாவட்டம் ஒரு போர்க்களமாக மாற்றமடையும் என்பதை இந்த அரசிற்கு கூறிக் கொள்ள விரும்புகிறேன்.இந்த போராட்டம் அரசாங்கத்திற்கு எதிரானதோ அரசினுடைய கட்சிக்கு எதிரானதும் இல்லை.எமது வாழ்விடங்களையும் வளங்களையும் பாதுகாப்பதற்கான உயர்ந்த ஒரு போராட்டமாக அமைந்துள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here