மக்களையும், அரச ஊழியர்களையும் ஏமாற்றிய இந்த அரசாங்கத்திற்கு, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் சரியான பாடம் கற்பிக்க சகலருக்கும் அழைப்பு விடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராயும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் நடமாடும் சேவை வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகிறார்.
இந்நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து இம்முறை புதிதாக உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவான உறுப்பினர்களுடன் இன்று (17.09) இடம்பெற்ற சந்திப்பின் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன் 14 இலட்சம் முதல் 15 இலட்சம் வரையிலான அரச ஊழியர்கள் இந்த அரசாங்கத்திற்கு வழங்கிய ஆணை தொடர்பில் அரச ஊழியர்கள் தற்போது திருப்தி அடையவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் மின்சாரத் துறையை மறுசீரமைப்புச் செய்வதாக கூறி, தற்போது 23,000 ஊழியர்களை அரசாங்கம் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
புதிய போட்டி தன்மை வாய்ந்த கட்டமைப்பை நோக்கி நகர்வது அவசியமாக அமைந்தாலும் தொழிலாளர்களுக்கு தொழில் பாதுகாப்பையும் சமூகப் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.







