மலையக மக்களுக்கான வீட்டு உரிமைப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு நாளை

178
0
Spread the love

மலையக மக்களுக்கு 2,000 வீட்டு உரிமைப் பத்திரங்களை வழங்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டம் நாளை (12.10) காலை 10.00 மணிக்கு பண்டாரவளை பொது விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது.

தோட்டப்புறப் பகுதிகளில் வசிக்கும் மலையக சமூகத்தினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதையும், அடிப்படை வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான, சுற்றுச்சூழலுக்கு உகந்த வீடுகளை அவர்களுக்கு வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த வீட்டுவசதித் திட்டம் செயற்படுத்தப்படுகிறது.

தோட்டத் தொழிலாளியாக (பதிவுசெய்யப்பட்ட/ஓய்வு பெற்ற/சாதாரண தொழிலாளியாக) இருத்தல், 05 வருடங்களாக செல்லுபடியாகும் தோட்ட குடியிருப்பாளராக இருத்தல், தோட்டத் தொழிலாளர் கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் உறுப்பினராக இருத்தல், முன்னர் வீட்டு உதவி பெறாமை, தற்போது லயன் அறையில் அல்லது தற்காலிக வீட்டில் வசிப்பது, மற்றும் தற்போதைய வசிப்பிடம் பேரிடர்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் (NBRO) அறிக்கையின் அடிப்படையில் இந்த வீடுகள் வழங்கப்படுகின்றன.

இந்த 4 ஆவது கட்டத்தின் கீழ் 9 மாவட்டங்களில் இருந்து 2056 பயனாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய உதவியின் கீழ் வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், நிர்மாணிக்கப்படும் வீடுகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் திட்டமும் எதிர்காலத்தில் செயற்படுத்தப்படும் என்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தின் அடுத்த கட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படும் என்றும், பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும், பெருந்தோட்டப் பகுதிகளில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here