இலங்கைக்கு கடத்துவதற்காக உச்சிப்புளி அடுத்த சல்லித் தோப்பு கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 லட்சம் இந்திய ரூபா பெறுமதியான சமையல் மஞ்சள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் கடற்கரை இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லை ஊடாக இலங்கைக்கு கஞ்சா, சமையல் மஞ்சள்,
கடல் குதிரை,கடல் அட்டை உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவு கடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இலங்கைக்கு இவ்வாறான பொருட்கள் கடத்தப்பட்டு வருவதை சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்து பொருட்களை பறிமுதல் செய்வதுடன் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களையும் கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மதியம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் உச்சிப்புளி அருகே களிமண்குண்டு அடுத்த சல்லித்தோப்பு கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கு இடமாக கடற்கரை ஓரம் கிடந்த மூட்டைகளை சோதனை செய்ததில் அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக சமையல் மஞ்சள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து 28 மூட்டைகளில் இருந்த சுமார் 1200 கிலோ கிராம் நிறையுடைய சமையல் மஞ்சள் மூட்டைகளை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் இராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு எடுத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
என சுங்கத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.










