2025 ஆம் ஆண்டின் மூன்றாவது பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் நேற்றைய தினம் (16.10) மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
பிரதேச செயலாளர் மா. காந்திபன் தலைமையில், மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள், மற்றும் பிரதேச சபையின் கீழ் நடைபெறும் பல்வேறு அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் பாரிய சவாலுக்குள்ளாகியிருக்கும் கழிவு முகாமைத்துவம் தொடர்பாக பொருளாதார பிரதியமைச்சர் உபாலி சமரசிங்கவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டபோது அவர் குறித்த விடயத்திற்கு உடனடியாக சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேசி ஒரு தீர்வினைப் பெற்றுத்தருவதாகத் தெரிவித்தார்.
கூட்டம் நிறைவுற்றதன்பின் மன்னார் தரவன்கோட்டைப் பகுதியில் தற்காலிகமாகத் கழிவுகளை அப்புறப்படுத்த தேர்வு செய்யபட்ட இடத்தினை அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் நேரடியாகச் சென்று பார்வையிட்டனர்.
குறித்த பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கூட்டுறவு, பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் உப்பாளி சமரசிங்க, வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், கே.காதர் மஸ்தான், வைத்தியர் பா. சத்தியலிங்கம், மேலதிக அரசாங்க அதிபர் எம். பிரதீப் பிரதேச சபை உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஜோர்ஜ் மைக்கல்,மற்றும் அழைக்கப்பட்ட திணைக்கள உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.











