பெல்லன்வில நடைபாதை அருகே உணவக உரிமையாளர் ஒருவரைச் சுட்டுக்கொன்ற சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என நவகமுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யப்படுவதற்காக மேல் மாகாண தெற்கு திசை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு ஒப்படைக்கப்பட்டவர்கள் பகமூண கொட்டபிட்டிய கங்கேயாய பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் இராணுவச் சிப்பாய் ஒருவரும், பகமூண ஒருபெந்தி சியம்பலாவ ஹீரவிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் என அப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொரலஸ்கமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெல்லன்வில நடைபாதை அருகே அமைந்துள்ள உணவகத்திற்கு முன்னால், நீல நிற முச்சக்கர வண்டியில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், தெஹிவளை வீதி பொரலஸ்கமுவ முகவரியில் வசிக்கும் உணவக உரிமையாளர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கடந்த 25ஆம் திகதி படுகொலை செய்துவிட்டு தெஹிவளை நோக்கித் தப்பிச் சென்றிருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட அவசர வீதித் தடை சோதனைகளின் போது, மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்ல முயன்ற இரு சந்தேகநபர்களை நவகமுவ பொலிஸார் கைது செய்தனர்.
பின்னர் சந்தேகநபர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி பெறப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள் நேற்று (29) மேல் மாகாண தெற்கு திசை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.







