தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் “தமக்கென ஓர் இடம் – அழகான வாழ்க்கை” தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ், 2026 ஆம் ஆண்டுக்கான முதல் கட்ட நிதி வழங்கல் மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (18.06) மன்னாரில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு மற்றும் மடு பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 98 பயனாளிகளுக்கு முதல் கட்ட நிதிக்கான காசோலைகள் இன்றைய தினம் வழங்கப்பட்டன.
அத்தோடு மன்னார் பள்ளி முனை மேற்கு பகுதியில் இவ்வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வும் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன்,கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தார்.
அதனை தொடர்ந்து மன்னார் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற காசோலை வழங்கும் நிகழ்வில் மன்னார் அரசாங்க அதிபர் கனகேஸ்வரன், பிரதேச செயலாளர் கே.காந்தீபன், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் சஜெயக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கி வைத்தனர்.
இத்திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்திற்கு 2026 ஆம் ஆண்டில் 199 வீடுகளை நிர்மாணிப்பதற்காக 199 மில்லியன் ரூபாய் நிதி அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டிருந்தது.
இதில் ஏற்கனவே 101 வீடுகளுக்கான கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் கட்டமாக மேலும் 98 வீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு பயனாளிகளுக்கு முதல் கட்ட நிதிக்கான காசோலைகள் இன்று வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







