நுவரெலியா மாவட்டத்தில் பிற்பகல் நேரங்களில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்ற நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் நிலவும் மழையுடனான வானிலையை அடுத்தே நேற்று இரவு (17 .10) குறித்த வான் கதவு திறக்கப்பட்டுள்ளதாக, கொத்மலை நீர்த்தேக்கத்துக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தொடர்ந்து மழையுடனான வானிலை தீவிரமாகும் பட்சத்தில் ஏனைய வான்கதவுகளையும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்கிளயர் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதுடன், மேல் கொத்மலை அணைக்கட்டுக்கு கீழ் ஆற்றுப்பகுதியை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.







