இன்று (19.10) இயக்கப்படவிருந்த இரண்டு இரவு நேர தபால் ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இஹல கோட்டை ரயில் நிலையம் அருகே ரயில் ஒன்று புரண்டதால் இவ்வாறு இரவு நேர தபால் ரயில்கள் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு இயக்கப்படவிருந்த இரவு நேர தபால் ரயில் சேவை மற்றும் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டைக்கு இயக்கப்படவிருந்த இரவு நேர தபால் ரயில் சேவையும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
கண்டியில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில் இஹல கோட்டை ரயில் நிலையம் அருகே தடம் புரண்டதால், மலையக மார்க்கத்தின் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.
பலத்த மழை காரணமாக ரயில் மார்க்கத்திற்கு அருகில் சிறிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், இதுவே இந்த தடம் புரள்வுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
ரயில் பெட்டிகளில் ஒன்று தடம் புரண்டுள்ள நிலையில், அதைத் தடமேற்றும் பணிகள் இடம்பெற்று வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.







