பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்- பொதுமக்களின் கருத்து கோரப்பட்டுள்ளது

135
0
Spread the love

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பாக எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் தமது கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் வழங்குமாறு பொதுமக்களிடம் நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார கோரிக்கை விடுத்துள்ளார்.

புதிய சட்டமூலம் குறித்து ஊடகங்களுக்கு விசேட அறிக்கையொன்றை விடுத்த அமைச்சர், தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு, மனித உரிமைகள் மற்றும் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் புதிய சட்டத்தைக் கொண்டு வருவோம் என தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வாக்குறுதி அளித்திருந்ததைச் சுட்டிக்காட்டினார்

அதற்கமைய, ஜனாதிபதி சட்டத்தரணி ரியென்சி அர்சகுலரத்ன தலைமையில் 17 பேர் கொண்ட நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

இந்த நிபுணர் குழு கடந்த 11 மாதங்களாக மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில், மூன்று மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்தை தன்னிடம் கையளித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

“இது ஒரு நுணுக்கமான மற்றும் உணர்வுபூர்வமான சட்டமூலம் என்பதால், நேரடியாக அமைச்சரவைக்கோ அல்லது நாடாளுமன்றத்திற்கோ சமர்ப்பிப்பதற்கு முன்னர், மக்களின் கருத்துக்களைக் கேட்டு அவர்களை தெளிவுபடுத்த வேண்டும் என நாம் நம்புகிறோம்,” என அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார குறிப்பிட்டார்.

2026 பெப்ரவரி 28 வரை கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.

இந்த சட்டமூலத்தின் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலப் பிரதிகள் நீதியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moj.gov.lk இல் பதிவேற்றப்பட்டுள்ளன.

இந்த சட்டமூலம் தொடர்பான ஆக்கபூர்வமான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் நீதியமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

தற்போது இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஆவணம் இறுதிச் சட்டமூலம் அல்ல என்றும், சிவில் அமைப்புகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் ஆலோசனைகளை அதே நிபுணர் குழு மீண்டும் பரிசீலிக்கும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

மேலும், இந்தச் சட்டமூலத்தை நடைமுறைப்படுத்துவதில் காவல்துறை மற்றும் ஏனைய பாதுகாப்புத் தரப்பினரின் அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகள் குறித்தும் பொதுமக்கள் தமது ஆலோசனைகளை வழங்க முடியும். என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here