இலங்கை நபர் மீது தாக்குதல் – கடற்றொழில் அமைச்சர் கடும் கண்டனம்

32
0
Spread the love

இலங்கை நபர் ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் மனித உரிமைகளை மீறும் அதேவேளை, அண்டை நாடுகளுக்கிடையிலான பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையையும் பாதிக்கும் வகையிலானது என அவர் வலியுறுத்தினார். குறிப்பாக, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை உறுதிப்படுத்துவது எந்த நாட்டிற்கும் அடிப்படைப் பொறுப்பாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கை கடற்பரப்பிற்குள் அடிக்கடி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் நடவடிக்கைகள் குறித்து நீண்டகாலமாகவே இலங்கை மீனவர்கள் கவலை வெளியிட்டு வருகின்றனர். பல சந்தர்ப்பங்களில் இலங்கை மீனவர்கள் அமைதியான முறையில் நடந்துகொண்டு, இந்திய மீனவர்களை “தொப்புள் கொடி உறவுகள்” என்ற உணர்வோடு அணுகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆனால், கடந்த காலங்களில் இலங்கை கடல் வளங்கள் பலமுறை சூறையாடப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோதமான மீன்பிடி முறைகள் கடல் சூழலுக்கும் மீன்வள வளங்களுக்கும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதனால், உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.

இவ்விடயங்களுக்கு தீர்வு காணும் நோக்கில், இந்திய உயர் அதிகாரிகளுடனும், மீன்பிடி துறை அதிகாரிகளுடனும் பல கட்டங்களில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இருநாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தி, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்க இணைந்த நடவடிக்கைகள் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இத்தகைய சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் விரைவான மற்றும் நியாயமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வலியுறுத்தினார்.

இருநாடுகளுக்கிடையிலான பிரச்சினைகள் அனைத்தும் அமைதியான பேச்சுவார்த்தைகள் மற்றும் பரஸ்பர புரிதலின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்பதே இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு எனவும் அவர் மேலும் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here