அமைதிப் போராட்டத்திற்கு இடையூறு – மன்னிப்புக் கோரிய பொலிஸார்

35
0
Spread the love

கடந்த 2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி நிலவிய காலகட்டத்தில், காலி கோட்டைக்கு அருகில் சட்டத்தரணிகள் குழுவினர் நடத்திய அமைதியான போராட்டத்திற்குள் பொலிஸார் புகுந்து இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பாக, அன்றைய காலகட்டத்தில் காலி பிராந்தியத்திற்குப் பொறுப்பாக இருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட மூவர், சம்பந்தப்பட்ட சட்டத்தரணிகளிடம் உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளனர்.

பொலிஸாரின் இந்தச் செயல் மூலம் தங்களது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டி, காலி பிராந்தியத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகளான அஜித் குமார மற்றும் அமரதிவாகர லியனகே ஆகிய இருவரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு, உயர் நீதிமன்ற நீதியரசர்களான ப்ரீதி பத்மன் சூரசேன, அசல வெங்கப்புலி மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகிய மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, குறித்த மனுவின் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்த அன்றைய காலி பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.என்.ஜே. வேதசிங்க, அன்றைய காலி பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் காலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

அங்கு பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான அரசாங்க சட்டத்தரணி, இந்தச் சம்பவம் தொடர்பாக பிரதிவாதிகள் மனுதாரர்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோருவதாகத் தெரிவித்தார்.

அத்துடன், மனுதாரர்களிடம் எழுத்துப்பூர்வமாக மன்னிப்புக் கோரும் ஆவணமொன்றை பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பார்கள் என்றும் அரசாங்க சட்டத்தரணி குறிப்பிட்டார்.

இந்த மன்னிப்பை மனுதாரர்கள் ஏற்றுக்கொள்வதாக அவர்கள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

இந்த இணக்கப்பாட்டைப் பதிவு செய்துகொண்ட பின்னர், நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த பிரதிவாதிகளான பொலிஸ் அதிகாரிகளை நோக்கி நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன கருத்துத் தெரிவிக்கையில்,

“அன்று நடந்த சட்டவிரோதச் செயல் குறித்தே இந்த மனுதாரர்களான சட்டத்தரணிகள் முறைப்பாடு செய்திருந்தனர். அவர்கள் காலியிலிருந்து இந்த வழக்கிற்காக இங்கு வந்துள்ளனர். இந்த வழக்கைத் தீர்த்துக்கொள்வதற்கு அவர்கள் முன்வந்திருப்பதை பாராட்ட வேண்டும். இது போன்றதொரு நிவாரணம் இவ்வளவு எளிதாகக் கிடைப்பதில்லை” என்று குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து, மனு மீதான விசாரணையை முடிவுக்குக் கொண்டுவர நீதிமன்றம் தீர்மானித்தது.

சட்டத்தரணி மஞ்சுள பாலசூரிய ஊடாக தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த மனுவில், பொருளாதார நெருக்கடி நிலவிய 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 06ஆம் திகதி, சட்டத்தரணிகள் குழுவொன்று காலி கோட்டைக்கு அருகில் பதாகைகளை ஏந்தி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

அச்சமயம், அந்த இடத்திற்குள் புகுந்த பொலிஸ் அதிகாரிகள், போராட்டத்திற்கு இடையூறு விளைவித்ததுடன், போராட்டப் பதாகைகளைக் கிழித்தெறிய நடவடிக்கை எடுத்ததாகவும் மனுதாரர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்தச் செயலின் மூலம் பிரதிவாதிகள் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளனர் எனத் தீர்ப்பளிக்குமாறு கோரியே குறித்த சட்டத்தரணிகளால் உயர் நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here