அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய வெளிமாகாணத்தைச் சேர்ந்த தனியார் பேருந்தின் வழி அனுமதிப் பத்திரம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் அறிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மையில் வெளிமாகாணத்திலிருந்து வந்த தனியார் பேருந்து ஒன்று இரண்டு நபர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பிலும், பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை உடனடியாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கவனத்துக்குக் கொண்டுசென்று குறித்த பேருந்துக்கு எதிராக முறைப்பாட்டைப் பதிவு செய்திருந்தது.
இதனடிப்படையில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்தின் அனுமதிப் பத்திரத்தை உடனடியாக இடைநிறுத்தியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், போக்குவரத்துச் சட்டங்களை மீறுவோருக்கு எதிராகத் தொடர்ந்தும் இவ்வாறான கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என வட மாகாண வீதி போக்குவரத்து
அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.







