தெரணியாகல பகுதியில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் நான்கு பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தெரணியாகல பகுதியில் போதைப்பொருள் சோதனைக்காகச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் குழுவிற்கும், அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே கடந்த 19ஆம் திகதி பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
அங்கு சட்டவிரோதமாகக் கூடி, தாக்குதல் நடத்தி நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்குக் காயம் ஏற்படுத்தியமை, கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் அவிசாவளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சந்தேகநபர்களை அடுத்த மாதம் (ஜூலை) 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அவிசாவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து தெரணியாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







