மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் அமைந்துள்ள ராணுவ சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரரொருவர், துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் உயிரிழந்துள்ளார்.
இன்று (22.06) காலை 10.00 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், துப்பாக்கி வெடிப்பால் படுகாயமடைந்த குறித்த ராணுவ வீரர் உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கே அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மன்னார் சவுத் பார் ராணுவ முகாமில் கடமையாற்றி வந்த கோப்ரல் ஜெயத்திலக வயது 46 என்னும் ராணுவ வீரரே குறித்த வெடிவிபத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவத்தின் போது மன்னார் பிரதான பாலத்துக்கு அருகே உள்ள சோதனை சாவடியில் அவர் கடமையில் இருந்ததாகவும். குறித்த சோதனை சாவடியில் கடமையில் ஈடுபடும் ராணுவ வீரர்களுக்கு அவரே துப்பாக்கிகளை வழங்கி வந்ததாகவும்.
அவ்வாறு வழங்க முற்படும்போது பெட்டிக்குள் இருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்தமையே விபத்திற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிழந்த ராணுவ வீரரின் சடலம் தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







