மன்னார் நகர பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம மட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பதில் கடமைகளிலிருந்து நேற்று (10.08) உத்தியோகபூர்வமாக விலகியுள்ளனர்.
இதற்கமைய, பதில் கடமைகளிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, மன்னார் நகர பிரதேச செயலாளரிடம் உத்தியோகபூர்வ கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த கடிதத்தின் பிரதியொன்று உதவித் திட்டமிடல் பணிப்பாளரிடமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கிராம மட்டத்திற்கான பதில் கடமையிலிருந்து விலகும் நடவடிக்கை மன்னார் மாவட்டம் முழுவதும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராம மட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தமது பதில் கடமைகளிலிருந்து விலகுவதற்கான காரணங்கள் தொடர்பில், இணைக்கப்பட்டுள்ள கடிதத்தில் விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2013ஆம் ஆண்டு முதல் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் பெற்று கடமையாற்றி வந்த நிலையில், பின்னர் அவர்களுக்கு வழங்கப்பட்ட பதில் கடமைகள் மற்றும் பதவிப் பொறுப்புகள் தொடர்பில் பல்வேறு நிர்வாகச் சிக்கல்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், தமது கோரிக்கைகள் தொடர்பில் உரிய தீர்வு வழங்கப்படாத நிலையில், 10.08.2026 முதல் பதில் கடமையிலிருந்து விலகி, தமது பிரதான கடமைகளில் மட்டும் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி தீர்வை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







