மன்னார் மாவட்ட அகில இலங்கை சமாதான நீதவான்கள் சம்மேளனத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (17.07.) மன்னார் மாவட்டச் செயலக ஜெய்க்கா மண்டபத்தில் நடைபெற்றது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள சமாதான நீதவான்களை ஒருங்கிணைத்து, அவர்களின் செயற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த சம்மேளனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் சமாதான நீதவான்களின் ஒற்றுமை, சமூக சேவைகளில் அவர்களின் பங்களிப்பு மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
இதன்போது மன்னார் மாவட்ட அகில இலங்கை சமாதான நீதவான்கள் சம்மேளனத்திற்கான நிர்வாகத் தெரிவு இடம்பெற்றதுடன், மாவட்டத்தின் ஒவ்வொரு பிரதேசத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
மேலும், சம்மேளனத்தின் எதிர்கால செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான சந்தா நடைமுறைகள் தொடர்பிலும், சம்மேளனத்திற்கென தனியான வங்கிக் கணக்கொன்றை ஆரம்பித்து பேணுவது தொடர்பிலும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மன்னார் மாவட்ட அகில இலங்கை சமாதான நீதவான்களுக்கான பணிப்பாளர் S.R. பெஸ்லிக்கா குலாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே. கனகேஸ்வரன் கலந்து கொண்டதுடன் மன்னார் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர்
ஜூட் மைக்கேல் ராஜ், அகில இலங்கை சமாதான நீதவான்களின் யாழ் மாவட்ட பணிப்பாளர் எம். ஆர் கிருபாகரன், அம்பாறை மாவட்ட பணிப்பாளர் எம் தினோசன் மற்றும் மன்னார் மாவட்ட அகில இலங்கை சமாதான நீதவான்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.







