மடுமாதா திருத்தலத்தின் ஆவணி உற்சவத் திருவிழாவை முன்னிட்டு முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பில் விஷேட கலந்துரையாடல் இன்று (11.08) செவ்வாய்க்கிழமை மடுத்திருத்தலத்தின் ஜோசப்வாஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
கடந்த 6ஆம் திகதி ஆவணி உற்சவம் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில் நாளை தொடக்கம்
எதிர் வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள உற்சவத்தில் இம்முறை 15 இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட முன்னாயத்த நடவடிக்கைகள் குறித்த விஷேட கலந்துரையாடல் அதிவந்தனைக்குரிய மன்னார் ஆயர் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் பங்கேற்புடன் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில், பாதுகாப்பு,சுகாதாரம்,மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம்,போக்குவரத்து வசதிகள் மதுபாவனைத் தடை போன்ற பல்வேறு விடயங்கள் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
மன்னார் அரச அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட குருமுதல்வர் கிறிஸ்து நேசன் அடிகளார், மடுத்திருத்தல பரிபாலகர் பெப்பி சோசை அடிகளார், மற்றும் அருட்பணியாளர்கள், மடு பிரதேச செயலாளர் மற்றும் அனைத்து திணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பொலிஸ் மற்றும் முப்படை அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.
குறித்த முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் கடந்த மாதம் 31 ஆம் திகதி மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றிருந்த நிலையில் அதன் இறுதிக் கலந்துரையாடல் இன்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.







