தற்போது நிலவும் எல் நினோ தாக்கத்தால் ஏற்படும் கடுமையான வெப்பமான காலநிலை, மக்களின் மனநலத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என காலி தேசிய மருத்துவமனையின் மனநல ஆலோசகர் மருத்துவர் ரூமி ரூபன் எச்சரித்துள்ளார்.
நீண்ட நேரம் சூரிய வெளிச்சத்தில் இருப்பதால் உடல் வெப்பநிலை அதிகரிப்பதுடன், அது மனநிலையையும் நேரடியாகப் பாதிக்கக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதிக வெப்பம் கோபத்தைத் தூண்டி, சகிப்புத்தன்மையைக் குறைப்பதுடன், மோதல் போக்கையும் அதிகரிக்கக்கூடும் என அறிவியல் ஆய்வுகள் சுட்டிக்காட்டுவதாக மருத்துவர் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய பாதிப்புகள் காலப்போக்கில் தீவிரமான உளவியல் சிக்கல்களாக மாறக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
குறிப்பாக சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் அதிக வெப்பநிலையால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள் என தெரிவித்த அவர், வாகன ஓட்டிகளிடையே கோபம் (Road Rage) மற்றும் குடும்ப வன்முறைச் சம்பவங்கள் அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மனநலச் சிகிச்சை பெற்று வருபவர்களின் உடல் மற்றும் மனநிலையும் கடுமையான வெப்பத்தால் மேலும் மோசமடையக்கூடும் என மருத்துவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, பொதுமக்கள் நேரடியாக சூரிய ஒளியில் நடமாடுவதை முடிந்தவரை தவிர்ப்பதுடன், போதுமான அளவு தண்ணீர் பருகி, உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.







