நுவரெலியா, பொரலந்த விநாயகபுரம் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக கணவனால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதலில் 43 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் கடந்த 29ஆம் திகதி மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கணவன், மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதைத் தொடர்ந்து, கூரிய ஆயுதத்தால் பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த பெண் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தையடுத்து குறித்த பெண்ணின் கணவர் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை நுவரெலியா பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.
சந்தேகநபர் நேற்று (30) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.







